வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

29 December 2011

ஜோதிட ஆய்வுத்தொடர் - மேஷ லக்னம் பாகம் - 4

வணக்கம் நண்பர்களே!

தொடர் தொடர்கிறது.

சென்ற பதிவில் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதியான செவ்வாய் 12 ராசிகளில் இருந்தால் எத்தகைய பலன்களை தருவார் என்று பார்த்தோம்.  இந்த பதிவில் மேஷ லக்னத்திற்கு 2, 7 ஆகிய இரண்டு வீடுகளுக்கும் அதிபதியான சுக்கிரன் 12 ராசிகளில் அமர்ந்திருக்கும் போது எவ்விதமான பலன்களை தருவார் என்று பார்க்கலாம்.

பொதுவாக சர லக்கினங்களுக்கு 2, 7-ம் வீடுகள் மாரக ஸ்தானங்கள் என்பது ஜோதிட விதி.

அந்த அடிப்படையில் இந்த இருவீடுகளுக்கும் ஆதிபத்யம் வகிக்கும் சுக்கிரன் மேஷ லக்னத்தாருக்கு மாரகாதிபதியாகிறார்.

இங்கு மற்றொரு விதியும் உண்டு.  இரு மாரகத்தான் கொல்லான் என்ற விதி.  அதாவது மாரக ஸ்தானங்களான 2,7-ஆகிய இரண்டு வீடுகளுக்கும் அதிபதியாக வரும் கிரகம் மாரகம் செய்யாது என்பதாம்.

இந்த விதி நடைமுறையில் அவ்வளவு சரியாக வராது.  ஏனெனில் மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் மாரகத்தை செய்யும் கிரகமேயாகும்.

சரி ஏன் இந்த இரண்டு வீடுகளும் மாரகத்தை கொடுக்கின்றன.  

நமது ஜாதகத்தில் ஆயுளை குறிக்கும் வீடு 8-ம் பாவம்.  இந்த 8-ம் பாவத்திற்கு 12-ம் பாவமாக 7-ம் வீடு வருகிறது.  எனவே 8ம் பாவம் தரும் பலனிற்கு நேர் எதிரான பலனை 7-ம் வீடு தருகிறது.  அதாவது 8-ம் பாவம் ஆயுளை கொடுக்க 7-ம் பாவமோ ஆயுளை குறைக்கிறது.

அவ்வாறே இந்த 8-ம் பாவத்திற்கு 8-ம் பாவமாக வருவது லக்னத்திலிருந்து  வரும் 3-ம் பாவமாகும்.  இந்த 3-ம் பாவமும் நமது ஆயுளை அதிகரிக்க செய்யும் மற்றுமொரு ஸ்தானமாகும்.  இந்த 3-ம் பாவத்திற்கு 12-ம் பாவமாக லக்னத்திலிருந்து 2-ம் பாவம் வரும்.

எனவே பொதுவாக அனைத்து லக்னத்திற்கும் இந்த 2, 7-ம் பாவங்கள் மாரக ஸ்தானங்களாக கருதப்படுகின்றன.  அதிலும் குறிப்பாக கால புருஷ லக்னமான மேஷத்திற்கு இந்த இரண்டு வீடுகளும் மாரக ஸ்தானங்களாக குறிப்பிடப்படுகின்றன.  ஸ்திர லக்னங்களுக்கு 3, 8-ம் வீடுகளும், உபய லக்னங்களுக்கு 7, 11-ம் வீடுகளும் மாரக ஸ்தானங்களாக சிறப்பு விதியாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.  ஆனாலும் அனைத்து லக்னங்களுக்கும் 2, 7-ம் வீடுகள் மாரக ஸ்தானங்களே என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

சரி விளக்கமெல்லாம் போதும் விஷயத்திற்கு வாருங்கள் என்கிறீர்களா!  ஓ.கே. வருகிறேன்.

ஜோதிடத்தில் இந்த 2, 7-ம் வீடுகள் எவற்றை குறிப்பிடுகின்றன என்று பார்ப்போமானால் 2-ம் இடம் குடும்பம், வாக்கு, தனம், கண், பேச்சுத்திறமை, கல்வி முதலியவற்றை குறிப்பிடுகிறது.  

அப்போ 7-ம் வீடு எதை குறிக்குமாம்?

அதாங்க உங்க வீட்டுகாரம்மாவை குறிப்பிடும்.  என்னது வீட்டுகாரம்மாவா? 

ஆமாம்!  சரி சரி உடனே பயத்துல எழுந்திரிச்சிராதிங்க, உட்கார்ந்தே படிங்க.

இல்ல எனக்கு வீட்டுகாரின்னாலே கொஞ்சம் பயம் அதான்.

ஊர்ல இருக்கிறதை எல்லாம் லுக்கு விட வேண்டியது.  வீட்டுக்கு வந்தா மட்டும் பயந்த புள்ள மாதிரி நடிக்க வேண்டியது எங்களுக்கு தெரியாதா.  எந்த வேலைக்கு, எப்படி, டைப்பு டைப்பா முழியை மாத்துவேன்னு எனக்கு தெரியும்டி.  இந்த பம்மாத்து பன்றதெல்லாம் நம்மகிட்ட நடக்காது மாமோவ்.

சரி கடி போதும் ஓவர் டூ பதிவு.

ஆக 7-ம் வீடு என்பது மனைவி, காமம், நாம் தொடர்பு கொள்ளும் நபர்கள், பங்குதாரர்கள், வியாபாரம், பயணம் முதலியவற்றையெல்லாம் குறிப்பிடும்.

ஆக இந்த இரண்டு வீடுகளும் இத்தனை முக்கியமான விஷயங்களை குறிப்பிடும் ஸ்தானங்களாக இருக்கும் போது இவை மாரக ஸ்தானம் என்று ஒதுக்கிவிட முடியாது. 

சுக்கிரன் என்பவர் அசுரர்களுக்கு குருவாக திகழ்பவர். அசுர குரு.  சஞ்சீவி மந்திரத்தை அசுரர்களுக்கு அளித்து அவர்களை உயிர்த்தெழ செய்தவர்.  வியாழ பகவான் தேவகுரு.  தேவர்களுக்கெல்லாம் வழிகாட்டும் குருவாக திகழ்பவர்.  அதாவது சுக்கிரனுக்கு நேர் எதிர்கட்சி.  இந்த இருவருக்கும் எப்போதுமே ஆகாது.

நிலைமை இப்படி இருக்கையில் மேஷ லக்னாதிபதியான செவ்வாய்  இருக்கிறாரே அவர் இருவருக்கும் தலையாட்டி சமாளித்து கொண்டிருப்பவர்.  குருவின் வீடான மீனத்திற்கும், சுக்கிரனின் வீடான ரிஷபத்திற்கும் நடுவில் மேஷம் இருக்கிறது.  இந்த இருவரையும் எப்படியோ சமாளித்துக் கொண்டு பேலன்சாக வண்டியை ஓட்டிக்கொண்டிருப்பவர்.  

அதாவது செவ்வாயானவர் சுக்கிரன், குரு ஆகிய இருவருக்கும் நட்பான கிரகமாக திகழ்கிறார்.  அவர்கள் இருவரது வீக்னெஸையும் தனக்கு சாதகமாக்கி கொள்ளும் சாமர்த்தியம் செவ்வாய்க்கு இருக்கிறது.  பூவே உனக்காக படத்தில் விஜய் நம்பியாரிடமும், நாகேஷிடமும் சமாதானமாக பேசுவாரே அந்த ரோல் செவ்வாய்க்கு.


ஆக மேஷ லக்னத்தை பொருத்தவரையில் இந்த இருவரும் நற்பலன்களையே செய்கின்றனர்.  கெட்டவரோடு சேராதவரையில்.

புரியலையா?  மேஷ லக்னத்திற்கு பாவிகளான சனி, புதன் ஆகிய இருவருடனும் சேராமலோ, அல்லது அவர்களால் பார்க்கப்படாமலோ இருந்தால் நன்மை.  மாரகாதிபதியான சுக்கிரன் இந்த பாவிகளோடு சேர்ந்து பலம் பெற்றால் மாரத்தையோ அல்லது மாரகத்திற்கு சமமான கெண்டங்களையோ தருவார்.  அவ்வாறே யோகாதிபதியான குருபகவான் இந்த சனி, புதனுடன் சேர்ந்தால் யோகத்தை தருவதில்லை.  எனவே மேஷ லக்னத்திற்கு குரு, சனி இணைந்தாலும் தரும-கருமாதிபத்ய யோகம் பலனளிப்பதில்லை.

பொதுவாக ஜோதிடத்தில் எந்த லக்னத்திற்கு யார் யார் நல்லவர்கள், கெட்டவர்கள் யார் என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.  ஜாதகத்தில் கெட்டவர்கள் பலமாக இருந்தால் துன்பம் அதிகம் இருக்கும்.  நல்லவர்கள் பலமாக இருந்தால் மகிழ்ச்சி.  

கலப்பாக இருந்தால்? இன்பம் பாதி, துன்பம் பாதி கலந்து செய்த கலவை நான்.  உள்ளே கடவுள், வெளியே மிருகம் விளங்க முடியா கவிதை நான் என்று  பாட வேண்டியது தான்.  பெரும்பாலும் பல ஜாதகங்களில் இப்படி இழுபறியாக தான் இருக்கும்.  இதுதான் பல ஜோதிடர்களுக்கு தலைவலியே.  பொறுமையாக உட்கார்ந்து அரிசியில் கல்லை பொறுக்குவது போன்று பொறுக்க வேண்டியது தான்.

சரி மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் எப்படி பலனளிப்பார் என்று சொல்லுங்கள்.  எங்களுடைய பொறுமையை சோதிக்காதீர்கள் என்று நீங்கள் முனகுவது நன்றாகவே கேட்கிறது. வருகிறேன் அதற்காக தானே இத்தனை பீடிகையெல்லாம்.

மேஷ லக்னத்தை பொறுத்தவரையில் சுக்கிரன் மிக முக்கியமான கிரகம்.  ஒரு பக்கம் முக்கியமான இரண்டு வீடுகளுக்கு ஆதிபத்யம் பெறுகிறார்.  மற்றொரு பக்கம் மாரகாதிபத்யம், கேந்திராதிபத்யம் ஆகிய தோஷங்களுக்கு ஆளாகிறார்.  எனவே மிகவும் கவனமாக சுக்கிரனுடைய நிலையை கணித்து பலன்களை கூறவேண்டும்.  இந்த சுக்கிரன் மேஷ லக்னத்திற்கு பலம் பெற்றாலும் ஆப்பு தான்.  பலம் குறைந்தாலும் ஆப்போ ஆப்பு.  தனம், குடும்பம், களத்திரம்  எல்லாம் புட்டுக்கும்.  

சுக்கிரனுக்கு களத்திர காரகன் என்ற பதவியும் உண்டு.  இங்கு அந்த ஸ்தானங்களுக்கு ஆதிபத்யமும் வருகிறது.  எனவே மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் களத்திர தோஷத்தை தரும் நிலையை இயற்கையிலேயே பெறுகிறார்.  அதாவது களத்திர காரகனே களத்திர ஸ்தானாதிபதியாகவும் வருவதால் மேஷ லக்னத்தாருக்கு களத்திர வழியில் சிக்கல்கள், பிரச்சினைகள், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடனான தொடர்புகள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு.  இது எதுவும் நடைபெறவில்லையெனில் அபிமான தார வாய்ப்பு நிச்சயம் ஏற்படும்.

அபிமான தாரம் என்பது பெண்களாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  புத்தகம், தொழில, சினிமா, கலைத்துறை, ஆடல், பாடல், இசை என்று எதாவது ஒரு விதத்தில் ஜாகதர் அதிக நேரத்தை செலவிட வேண்டிய நிலைக்கு ஆளாக வேண்டியிருக்கும்.  ஒருவிதத்தில் நோக்கினால் இதுவும் களத்திர தோஷமேயாகும்.  

உங்க வீட்டுகாரம்மாவை கேட்டுப் பாருங்களேன்.  ....க்க்கும் இதுக்கு வேற வேலையில்லை எப்ப பார்த்தாலும் எதையாவது நோண்டிக்கிட்டே இருக்கும்.  வீட்ல சனம் இருக்கறதே தெரியாது.  எங்கயோ சந்திர மண்டலத்தில பொறக்க வேண்டியதெல்லாம் என் தலையில கட்டிவச்சிட்டான் எங்கப்பன் அவனை? என்று பல்லை கடிப்பார்கள்.  ம்ம் எல்லாம் வாங்கி வந்த வரம்.

ஆக மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்தோஷமாக வாழ ஒரே வழி மனைவியை அன்பாக, சந்தோஷமாக கண்கலங்காமல் வைத்திருப்பதே.  அப்படி வைத்திருந்தால் சுக்கிரனின் மற்றொரு வீடான 2-ம் வீடான ரிஷபமும் நல்ல பலனை தரும்.  அதாவது குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வம் என்று குதுகலமாக இருக்கும்.  அங்கே எதாச்சும் பிரச்சினை பண்ணினால் இங்கே புட்டுக்கும்.  அய்யா பைசாவுக்கு சிங்கியடிக்க வேண்டியது தான்.

ஆக சுக்கிரன் நிலை மிகவும் முக்கியம் கொஞ்சம் அசந்தாலும் முக்கியமான இரண்டு வீடுகளை பதம் பார்த்துவிடுவார்.  மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

சரி கதை போதும்.

விஷயத்திற்கு வருவோம்.

மேஷ லக்னத்திற்கு லக்னத்தில் சுக்கிரன் இருக்கும் போது என்ன பலன்களை தருவார்?

லக்னம் என்பது என்ன?

ஜாதகரின் தலையை குறிப்பிடும் இடம்.  

தலையில் என்ன இருக்கிறது.  

தெரியாதா முடி இருக்கிறது. 

ச்சே மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று கேட்டேன்.

மூளை இருக்கிறது.

மூளை என்ன செய்கிறது?

சிந்திக்கிறது.  எண்ணங்களை தோற்றுவிக்கிறது.  அவற்றை செயல்படுத்த உடலின் மற்ற பாகங்களை தூண்டுகிறது.
சுக்கிரன் என்பவர் யார்?  அவருடைய வேலை என்ன?

சுக்கிரன் ஆடம்பரத்திற்கு காரகர்,   போக இச்சைக்கு காரகர்.  அழகிற்கு காரகர்.  கலைகளுக்கு காரகர்.

ஆக லக்னத்தில் உள்ள சுக்கிரன் என்ன செய்வார்.

மேற்கண்ட  விஷயங்களை அதிகப்படுத்துவார் அல்லது குறைப்பார்.  குறைந்தபட்சம் அவற்றை செயல்படுத்த தூண்டுவார்.

அது சுக்கிரன் இருக்கும் நட்சத்திர சாரம் மற்றும் மேஷ லக்னாதிபதியான செவ்வாயின் நிலையைப் பொறுத்தது.

பொதுவாக செவ்வாய் உடல் பலத்தை குறிக்கும் கிரகம். சுக்கிரன் காமத்தை தூண்டும் கிரகம்.  செவ்வாயின் வீட்டில் சுக்கிரன் இருந்து செவ்வாயால் இணைந்தோ அல்லது பார்க்கப்பட்டோ இருந்தால் அந்த ஜாதகருக்கு காம உணர்வுகள் அதிகம் இருக்கும்.  சனியின் வீட்டில் சுக்கிரன் இருந்து சனியால் இணைந்து அல்லது பார்க்கப்பட்டு இருந்தாலும் அவர்களுடைய உணர்ச்சிகளை அவர்களால் கட்டுப்படுத்த இயலாது.  இளவயதில் சுக்கிர தசா வந்தால் அவர்கள் பிஞ்சில் பழுத்துவிடுவார்கள்.  இந்த பலன் ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொருந்தும்.

இந்த நிலையில் லக்னத்தில் இருக்கும் சுக்கிரனை குரு பார்த்தால் அடக்கத்துடன் இருப்பார்கள் அல்லது அவர்களது தவறுகள் வெளியுலகத்திற்கு தெரியாது.

இது ஒரு கோணம்.  மற்றொரு கோணத்தில் பார்த்தால் சுக்கிரன் குடும்ப ஸ்தானாதிபதி.  அவர் லக்னத்திற்கு வந்தால் என்ன பலன்.

ஜாதகர் குடும்பத்தின் மீது மிகவும் பாசமாக இருப்பார்.  நல்ல பேச்சுத்திறமை இருக்கும்.  தன ஸ்தானாதிபதி லக்னத்திற்கு வந்ததால் ஜாதகர் தனவானாக இருப்பார்.  இனிய குரல்வளம் இருக்கும்.  அழகிய கண்கள், கரு கருவென அடர்ந்த கூந்தல் ஆகிய அமைப்புகளெல்லாம் ஜாதகரிடம் இருக்கும்.

சுக்கிரன் 7-க்குரியவர் என்பதால் அவர் லக்னத்தில் இருந்தால் ஜாதகரின் மனைவி மீது மிகவும் பிரியமுடன் இருப்பார்.  ஜாதகருக்கு நன்கு தெரிந்தவரே அவருடன் பழகியவரே அவருக்கு மனைவியாக அமைவார்.  ஜாதகர்  பிறரிடம்  மிகவும் இனிமையாக பேசி பழகுவார்.  நட்பு வட்டம் அதிகம் இருக்கும்.

ஆக முரட்டு சுபாவம் உடைய மேஷ லக்னத்தாரை மென்மையான சுபாவம் கொண்டவராக மாற்றுவதும், காண்பவரை ஈர்க்கும் அழகும் லக்னத்தில் உள்ள சுக்கிரனால் ஏற்படும் பலன்களாகும்.  

இந்த லக்ன சுக்கிரனை பாபிகளான சனியோ அல்லது புதனோ பார்க்க, சேர பலன்கள் வேறுவிதமாக நடந்தேறும்.  மேற்கூறிய பலன்களில் பிரச்சினைகள் அல்லது எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் இருக்கும்.  சுக்கிரனும் மாரகத்தையோ அல்லது மாரகத்திற்கு ஒப்பான கண்டங்களையோ தனது தசா புக்தி காலங்களில் கொடுப்பார்.

சுக்கிரன் தனது வீடான ரிஷபத்தில் 2-ல் ஆட்சி பெற்றால் என்ன பலன்களை கொடுப்பார்.

2-க்குரியவர் பலம் பெற்றதால் தனம், வாக்கு, குடும்பம் ஆகிவற்றில் சிறப்பான பலன்களை சுக்கிரன் அளிப்பார்.  குரு, சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோரது பார்வை அல்லது சேர்க்கை இந்த 2-ல் உள்ள சுக்கிரனுக்கு கிடைத்தால் ஜாதகர் மிகவும் யோகவானாக இருப்பார்.

2-ல் ஒரு கிரகம் பலம் பெற்றால் அந்த வீட்டிற்கு 6-ம் வீடு பாதிக்கப்படும்.  ஏன்?

மேஷ லக்னத்திற்கு 2-ம் வீடாக வருவது ரிஷபம்.  அந்த ரிஷபத்திற்கு 6-ம் வீடாக வருவது சுக்கிரனின் மற்றொரு வீடாகிய துலாம்.

துலாம் ஏன் பாதிக்கப்படுகிறது?

துலாம் வீட்டிற்கு 8-ம் வீடாக வருவது ரிஷபம்.

அங்கு சந்திரன் உச்சம் பெற்றாலோ அல்லது சுக்கிரன் ஆட்சி பெற்றாலோ துலாம் பாதிக்கப்படும்.

எந்த ஒரு வீட்டிற்கும் 8-ம் வீட்டில் பலம் பெற்ற கிரகங்கள் இருந்தாலும் அந்த பாவம் பாதிக்கப்படும் என்பது ஜோதிட விதி.

அந்த அடிப்படையில் மேஷ லக்னத்திற்கு துலாம் 7-ம் வீடாக வரும்.  அந்த வீட்டிற்கு 8-ம் வீ்டான ரிஷபத்தில் சுக்கிரன் பலம் பெற்றால் 7-ம் வீடான துலாம் பாதிப்படையதான் செய்யும்.

எனவே மனைவி ஸ்தானமான 7-க்கு 8-ம் வீடு பலம் பெற்றதால் மனைவிக்கு கெண்டாதி தோஷங்கள் ஏற்படும்.  உடல் நலம் பாதிக்கும்.  பலருக்கு இருதாரம் அமையலாம்.  

மேலும் மேஷ லக்னத்திற்கு 2-ம் வீடு மாரக ஸ்தானமாக வருவதால் 2-ல் உள்ள சுக்கிரன் பாபிகள் சம்பந்தம் பெற்றால் ஜாதகருக்கே மாரகத்தையோ அல்லது மாரகத்திற்கு சமமான கெண்டங்களையோ தருவார்.

ஜோதிடத்தில் எந்த ஒரு கிரகமும் முழுமையாக நல்ல பலனையோ அல்லது தீய பலன்களையோ தந்துவிடுவதில்லை.  தாம் இருக்கும் இடத்திற்கு ஏற்ப தன்னுடன் இணைந்த, பார்த்த கிரகங்களுக்கு ஏற்ப நன்மை, தீமை ஆகிய இரண்டையும் கலந்து தான் தரும்.  ஒருவிதத்தில் நன்மையை தந்தால் மற்றொரு விதத்தில் தீமையாக முடியும்.  தீமையிலும் நன்மையை தரும்.  ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு தானாக திறக்கும்.  இதையே கண்ணதாசனின் வரிகளில்,

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் 
 வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும் - இந்த 

இரண்டு கட்டளை அறிந்த மனதில் 
எல்லா நன்மையும் உண்டாகும் 

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு


தெய்வத்தின் கட்டளை ஆறு

அடுத்த பதிவில் சந்திப்போம்......

6 comments:

  1. Thank u for this post.Wish u happy new year

    ReplyDelete
  2. boss pinni bedaledukkiringa ! nanri
    mudija alavu delay pannaama thodarai complete pannidunga ! romba aarvama erukku boss !

    ReplyDelete
  3. வாங்க பெருமாள்சிவன், உங்கள் பாராட்டிற்கு நன்றி. நானும் முயன்றவரை தொடர்ச்சியாக எழுதனும் என்று தான் நினைக்கிறேன் முடியலையே. நம் கையில் என்ன இருக்கு பார்க்கலாம்.

    ReplyDelete
  4. சார் எனக்கு ஒரு சந்தேகத்தில் மனம் தவிக்கிறேன் தயவு செய்து விளக்கவும் . பொதுவாக ஒன்னரை மாதத்தில் ஒரு ராசியை கடக்கவேண்டிய செவ்வாய் இப்பொழுது சிம்மத்தில் ஒரு எட்டுமாத காலம் சிம்மதிலேயே இருக்கும் என்கிறார்களே இது எதனால் என்று விளக்கினால் .மனம் தெளிவேன் மற்றும் மிக்க நன்றி .

    ReplyDelete
  5. பெருமாள்சிவன், கிரகங்களின் சஞ்சாரத்தில் பல விஷயங்கள் உள்ளன. அதுபாட்டுக்கும் நேரே கரீக்டா சுத்திகிட்டிருந்தா யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்ல. திடீர்ன்னு புரோகிராம் ஸெட்யூலை மாத்திரும்.

    அதிசாரம், வக்ரம், ஸ்தம்பனம் என்று ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கு.

    இதுல செவ்வாய் தற்போது மாட்டிக்கிட்டிருப்பது ஸ்தம்பனம் என்ற கதியில். அதான் லேட்டாகுது.

    ஸ்தம்பனம் பற்றி மூலநூல்களை ஒரு முறை பார்த்துவிட்டு உங்களுக்கு விரிவாக விளக்கம் கொடுக்கிறேன் அதுவரை ப்ளீஸ் வெயிட்.

    ReplyDelete
  6. oruththaroda manampolathaan avanga ezhuththum erukkum ! ungala enakku romba pidichirukku sir.

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.