வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

09 April 2011

அன்னா ஹசாரே - காந்திஜியின் மறுபிறவி


”தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் - ஆனால்
தர்மம் மறுபடியும் வெல்லும்”

பாஞ்சாலி சபதம் இயற்றிய பாரதியின் வரிகள் இவை.  இந்த வரிகள் அமரத்துவம் பெற்றவை.  என்றும் நிலைத்திருப்பவை.

தற்போது தர்மத்தின் தலைவனாக உருவெடுத்திருப்பவர் நம் அனைவரின் பெரு மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய திரு.அன்னா ஹசாரே அவர்கள்.  அகிம்சை வழியில் நின்று நாட்டின் அதிகார ஆணவ வர்க்கத்தை தன் காலடியில் விழவைத்தவர்.   மகாத்மா காந்தியின் அகிம்சை வழி என்றும் எப்போதும் எப்பேர்பட்ட கொம்பனையும் வீழ்த்தி வெற்றியை பெற்று தரும் என்று நாம் அனைவருக்கும் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார் திரு. அன்னா ஹசாரே அவர்கள்.  

சூரியன் அஸ்தமிப்பதில்லை என்று கொக்கரித்த ஆளானாப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே தனது அகிம்சை மூலம் வீழ்த்திக் காட்டியவர் நமது தேசப்பிதா.  உறுதியான சக்கிவாய்ந்த அந்த அகிம்சா வழியின் முன்பு இந்த காலத்து அரசியல் வியாதிகள் எந்த மூலைக்கு தேறுவர்.  பாவம் அவர்களை கதிகலங்கி போக செய்தவர் திரு. அன்னா ஹசாரே அவர்கள்.

இந்தியாவை உலகம் முழுவதும் தலைகுனியச் செய்த மிகப்பெரிய ஊழல் வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் இத்தகைய காலகட்டத்தில் ஊழலுக்கெதிரான லோக்பால் சட்ட மசோதாவை தயாரிக்கும் குழுவில் மக்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று போராடியவர் திரு. அன்னா ஹசாரே அவர்கள்.  அதில் அவர் வெற்றியும் பெற்றுத் தந்துள்ளார்.  இந்த நாள் நம் அனைவரின் வாழ்விலும் நிச்சயம் ஒரு பொன்னாள் என்றால் அது மிகையாகாது.

ஏனெனில் பூனைக்கு யார் மணிகட்டுவது என்று எல்லோரும் பயந்து ஒதுங்கி போகும் இந்த காலத்தில் யாருக்கும் பயப்படாமல் துணிச்சலாக தனி ஒரு மனிதராக நின்று போராடி பெற்ற வெற்றி என்பது ஊழல்வாதிகளுக்கு கிடைத்த முதல் சமட்டி அடி.  இப்படிப்பட்ட நேர்மையான உண்மையான மனிதர்கள் அத்திப்பூத்தாற்போல் நமது நாட்டில் இன்னும் பலர் வாழ்ந்து வருகிறார்கள்.  அவர்களுக்கெல்லாம் நம்பிக்கை ஊட்டிய மனிதரல்லவா அவர்.

நீதியற்ற நியாயமற்ற அரக்கர்கள் ஆளும் இந்த நாட்டில் அவரது கோரிக்கைகளை மட்டும் உடனே ஏற்றுக்கொள்ளுமா அதிகார வர்க்கம்.  தனது திமிர் தனத்தை அவரிடமும் காட்டிதான் பார்த்தது.  விடுவாரா திரு. அன்னா ஹசாரே எடுத்தார் அகிம்சா ஆயுதத்தை ஆடிப்போனது அதிகார வர்க்கம் என்ன செய்வது என்று தெரியாமல் துடித்தார்கள், தவித்தார்கள் இறுதியில் வேறு வழியில்லாமல் அவரது காலில் மண்டியிட்டார்கள்.  அகிம்சை வென்றது.  வயதானதால் உடல் தளர்வுற்றாலும் உள்ளத்தால் வலிமை மிக்கவர்களால் மட்டுமே அகிம்சை வழியில் வெற்றி பெற இயலும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

காந்திஜியின் கொள்கைகளை மறந்து ஆட்சியில் இருக்கும் அவர் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றி மக்களை சுரண்டும் ஒரு கட்சிக்கு மீண்டும் காந்திஜியை நினைவூட்டியவர் என்ற பெருமை திரு. அன்னா ஹசாரே அவர்களையே சாரும்.

ஒரு மனிதன் பொதுவாழ்வில் தூய்மையானவனாக, நேர்மையாளனாக வாழ்ந்தால் அந்த மனிதன் பொது நலனுக்காக போராட முனைந்தால் எப்பேர்ப்பட்ட கொடுங்கோலனும் அவனைக் கண்டு அஞ்சுவான்.  சத்தியத்தின் முன்பு அநீதி பயந்து ஓடி ஒளிந்து போகும்.  இது இயற்கையின் நியதி.  பொதுப் பிரச்சனைகளுக்காக போராட நினைப்பவர்கள் அப்படிப்பட்ட தூய்மையான மனிதர்களாக வாழ்ந்தால் அன்றி அவர்கள் போராட்டம் என்றும் வெற்றி பெறா.  

இன்று தன்னை இனத்துக்காக போராடியவன், மதத்துக்காக போராடியவன், மொழிக்காக போராடியவன் என்றெல்லாம் விளம்பரப்படுத்திக் கொண்டு பெருமை பேசி பல பட்டங்களை தமக்குத் தாமே சூட்டிக்கொண்டு திரிகின்றனரே சிலர்.  அவர்கள் போராட்டம் என்றேனும் வெற்றி பெற்றதா என்றால் இல்லை.  ஏனெனில் சுயநலமிக்க அத்தகைய மனிதர்கள் அதற்கான பலன்களை தமக்காக அறுவடை செய்து கொண்டார்கள்  அவர்களின உண்மைச் சுய ரூபத்தை இந்த நாடும் நாட்டு மக்களும் நன்கு அறிவர்.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வெற்றிபெற்றமைக்காக நம் நாட்டுமக்கள் என்றென்றும் திரு. அன்னா ஹசாரே அவர்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளனர்.  அவரது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்பது ஊழல், அதிகார,  ஆணவ  வர்க்கத்திற்கு எதிராக மக்கள் பெற்ற வெற்றியாகும்.  

திரு. அன்னா ஹசாரே அவர்களது போராட்டத்திற்கு ஊடகங்கள் மிகச் சிறப்பாக தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளன.  ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் ஊடகங்கள் தங்கள் கடமையை சரியாக செய்துள்ளன.  

தமிழ் வலைப்பதிவர்களாகிய நாம் அனைவரும் இந்த போராட்டத்தின் வெற்றியை நாட்டு மக்கள் அனைவருக்கும் கொண்டுச் செல்ல வேண்டும்.  
தாங்கள் சொந்தமாக தங்கள் பதிவில் திரு. அன்னா ஹசாரே அவர்களின் போராட்டத்தைப் பற்றி நிச்சயம் எழுத வேண்டும்.  எழுத இயலாமல் போதிய நேரம் கிடைக்காதவர்கள் தாங்கள் படித்தவற்றை மற்றவர்களும் தெரிந்துகொள்ளும் வழியில் பிறருக்கு மின்னஞ்சலில் இணைப்பு சுட்டியை (லிங்க்) இணைத்து அனுப்பிவைக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.  இதனை அனைவரும் ஒரு கடமையாகவே செய்ய வேண்டும் என்று தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

ஊழலுக்கு எதிராக மக்கள் எழுச்சி பெற வேண்டிய நேரம் இது.  மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டால் தான் தீய சக்திகள் நம் நாட்டை விட்டு அகலும்.  இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க்கும்.

வாழ்க பாரதம்! வளர்க நின் புகழ்!!
வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்!!

11 January 2011

ஜோதிடமும் - மனிதர்களும் - ஓர் ஒப்பீடு




ஆதிகாலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் கிரகங்களை வெறும் கண்களால் பார்க்கும் சக்திகளை பெற்றிருந்தார்கள்.  சமீபத்தில் நான் ஒரு வலைதளத்தில் ஒரு பதிவை படித்ததாக ஞாபகம், கல்தாமரை என்ற மூலிகை சதுரகிரியில் இருக்கிறது, அந்த அதிசய மூலிகையின் மேல் நின்று ஆகாயத்தை பார்த்தால் பகலில் கூட நட்சத்திரங்கள், நவகிரகங்கள் பளிச்சென நம் கண்களுக்குத் தெரியுமாம்.  அத்தகைய அறிவும், ஆற்றல்களையும், அனுபவங்களையும் நிரம்ப பெற்றவர்கள் நம் முன்னோர்களான தவமுனிவர்கள்.

நமது  முன்னோர்கள் வானில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் சூரிய, சந்திரர்களின் சஞ்சாரங்களை கொண்டு காலநிலைகளை கணக்கிட பயன்படுத்தி வந்துள்ளனர்.  ஜோதிடத்தின் ஆரம்பம் வான சாஸ்திரம் ஆகும். காலப்போக்கில் ஒரு குறிப்பிட்ட கிரக நிலையில் இருக்க பிறந்தவர்களின் வாழ்வில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளை கவனித்து  அவற்றை சேகரித்து ஒப்பிட்டு பார்க்க தொடங்கினார்கள்.  தங்களின் அனுபவத்தில் கிடைத்த தகவல்கள் பலவற்றையும் திரட்டி ஓலைச்சுவடிகளில் எழுதிவந்தனர்.  அந்த அடிப்படையில் தோன்றியதே ஜோதிடம் என்னும் அரிய கலையாகும்.
 
குறிப்பிட்ட காலகட்டத்தில் கிரகங்கள் அந்தந்த ராசிகளில் இருக்கப் பிறந்தவர்கள் இன்னின்ன பலன்களை அனுபவித்தனர்.  எனவே பிற்காலத்தில் அவ்வாறான கிரக அடைவுகளை பெற்று பிறந்தவர்களுக்கும் அத்தகைய பலாபலன்கள் ஏற்படலாம் என தங்களின் அனுபவத்தின் அடிப்படையில் கிரகங்களுக்கும், இராசிகளுக்கும் குணாதிசயங்களையும், இன்ன பிற இயல்புகளையும் நிர்ணயித்தனர்.

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.  ஜோதிடத்தில் முதன்மையான கிரகம் சூரியன் ஆகும்.  கிரகங்களுக்கு தலைவனாக இருக்கும் சூரியன் ஜோதிடத்தில் நெருப்பு கிரகமாக குறிப்பிடப்படுகிறது.  பிறந்த ஜாதகத்தில் சூரியன் ஆதிக்கம் அதிகமாக இருக்கப் பிறந்தவர்கள் உஷ்ண, பித்த தேகம் கொண்டவர்களாகவும்.  எந்த காரியத்தையும் கணகச்சிதமாக நிறைவேற்றக் கூடியவராகவும், நேர்மையான எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.  சூடான உணவு பதார்த்தங்களை மிகவும் விரும்பி உண்ணக்கூடியவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

காட்டிற்கு ராஜா சிங்கம். கர்ஜிக்கும் சிங்கத்தின் குரலைக் கேட்டாலே மற்ற மிருகங்களுக்கு எல்லாம் உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்துவிடும்.  இயற்கையாகவே தலைமை தாங்கும் குணம் இயல்பாக அவர்களிடம் இருக்கும்.  சூரியன் ஆதிக்கம் பெற்ற பலரும் அத்தகைய குணங்களை பெற்றிருப்பினும் வெளியில் நாம் பார்க்கும் போது சாதாரண இயல்புடையவர்களாக தெரிவார்கள்.  ஆனால் மிக முக்கியமான நெருக்கடியான நிலை ஏற்படும் போதுதான் அவர்களின்  உண்மையான சுபாவம் நமக்கு தெரியவரும்.  

சூரியன் நல்ல நிலையில் அமைந்தவர்ககள் மிகவும் நேர்மையாகவும், ஒளிவு மறைவு இல்லாத, தன்னலமில்லாமல் வாழும் இயல்புடையவர்கள்.  தங்கள் கண்முன்னே நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க தயங்காதவர்கள்.  பொய், சூது, வாது. திருட்டு போன்ற தீயகுணங்களை அறவே வெறுப்பவர்கள்.  தங்களைப் போலவே மற்றவர்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அவர்களிடம் இருக்கும்.  இவர்களுக்கு கோபம் வரும்படி யாரும் நடந்து கொள்ளக்கூடாது. தவறி கோபம் வந்தால் வெடித்து சிதறிவிடுவார்கள்.  தங்கள் முன்னே எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தங்களது எதிர்ப்பை எவ்விதத்திலேயும் காட்ட துணிந்தவர்கள்.

12 இராசிகளில் சிம்ம லக்னம்  சூரியனின் ஆட்சிவீடாகும்.  மேற்கண்ட குணாதிசயங்கள் ஏறக்குறைய சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் அல்லது சிம்ம ராசியில் சந்திரன் இருக்கப் பிறந்தவர்களுக்கும் காணப்படும்.  மேலும் மற்ற லக்னங்களில் பிறந்திருந்தாலும் சூரியன் பிறந்த ஜாதகத்தில் நல்ல ஆதிபத்யம் பெற்று  ஆட்சி, உச்சம், நட்பு பெற்று  நல்ல நிலையில் அமைந்திக்க பிறந்தவர்கள் அனைவருக்கும் மேற்கண்ட சூரியனின் குணாதியங்கள் பெற்றிருப்பர்.

அரசியலில் நம்மை வழிநடத்தும்  பலரும் சூரியன் நல்ல நிலையில் இருக்க பிறந்தவர்களே ஆவர்.  நேர்மையற்ற அரசியல் தலைவர்களுக்கு சூரியன் தீய கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்று வலிமையுடன் இருப்பார்.  சூரியன் நல்ல நிலையில் இருக்கப்பிறந்தவர்கள் ஆயிரம் பேர் கொண்ட கூட்டத்தில் கூட தனித்து தெரிவார்கள் அவர்களது முகம் பிரகாசமாகவும், மிகவும் செயல்திறன் கொண்டவர்களாகவும் இருப்பர்.  அவர்களை ஆயிரத்தில் ஒருவன் என்று கூறலாம்.  அரசனாக வாழ்பவர்கள் அல்லது அரசனுக்கு ஒப்பானவர்கள் இவர்கள். தற்காலத்தில் அரசு பதவியில் உள்ளவர்கள் அனைவருக்கும் ஏதேனும் ஒருவகையில் சூரியன் வலுப்பெற்றிருப்பதை அவர்களது ஜாதகத்தில் காணலாம்.  தந்தையின் அன்பை பெற்றவர்கள் தந்தைவழி அனுகூலமும் அவர்களுக்கு உண்டு.

ஜாதக்த்தில் சூரியன் வலிமை குன்றி இருந்தால் அவர் ஆளுமைத்திறன் கொண்டவராக இருக்க முடியாது. மேலும் அவர்களுக்கு உடலில் உஷ்ண கோளாறுகள் ஏற்படும்.  கண்களில் ஒளிக்கு காரணம் சூரியனும் சந்திரனும் ஆவார்கள் என ஜோதிடம் குறிப்பிடுகிறது.  எனவே சூரியன் பாதிப்படைந்த நிலையில் பிறந்தவர்கள் கண்களில் குறைபாடுகள் உள்ளவர்களாக இருப்பர்.  சூரியன் நமது குடும்பத்தில் தந்தைக்கு காரகம் வகிப்பவர்.  எனவே தந்தை வழி உறவுகள் பாதிப்படையும் பலருக்கு தந்தையை பிரிந்தோ அல்லது தந்தை உயிருடன் இல்லாமலோ உள்ள நிலை ஏற்படும்.

சூரியனுக்கு உகந்த தானியம் கோதுமை.  பஞ்ச பூதங்களில் சூரியன் நெருப்பை குறிக்கிறார்.  சிலரைப் பார்த்தால் நல்ல  பளபளப்பான வழுக்கை தலையுடன் பெரிய மனிதரைப் போல இருப்பார்கள் அவர்க்கெல்லாம் ஜாதகத்தில சூரியன் வலுவாக இருக்கும் சூரியன் தலை மயிரை குறிப்பவர்.  உடல் உஷ்ணத்தால் தலையில் உள்ள மயிர்களலெல்லாம் கொட்டிவிடும். 

சூரியனுக்கு உகந்த நிறம் ஆரஞ்சு நிறமாகும்.  நவரத்தினங்களில் மாணிக்க கல் சூரியனுக்கு மிகவும் உகந்தது (கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா!!).  எண்கணிதத்தில் முதல் எண்ணாகிய எண் 1 சூரியனுக்குரிய எண்ணாக குறிப்பிடப்படுகிறது.  கடவுள்களில் முதன்மையான சிவன் சூரியனுக்குரிய அதிதேவதையாக உள்ளார்.   27 நட்சத்திரங்களில் கார்த்திகை, உத்திரம்,  பூராடம் சூரியனின் நட்சத்திரங்களாக குறிப்பிடப்படுகிறது.

அரிது அரிது மானிடராக பிறத்தல் அரிது என்றார் ஔவையார்.  

நான் இங்கு சொல்ல வருவது என்னவென்றால் அரிது அரிது சூரியன் வலுவாக நல்ல நிலையில் உள்ள மனிதர்களாக பிறத்தல் அரிது.   ஏனென்றால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, உண்மை, நேர்மை இவற்றிற்கெல்லாம் அதிபதியான சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த ஆண்மை மிக்க ஒரு தலைவன் நமக்கு அமையாமல் இருப்பதால் தான் நாம் முதுகெலும்பற்ற மனித புழுக்களாக, லஞ்சம், ஊழல் என்ற சாக்கடையில் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ வேண்டியதாகிறது.  

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும் என்ற  பாரதியின் பாஞ்சாலி சபதம் பாடல் நினைவுக்கு வருகிறது.  நிச்சயம் நமக்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறக்கும்.  நமது முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல்கலாம் அவர்கள் குறிப்பிட்டபடி நம் தாய்நாடு விரைவில் வல்லரசாக மாறும்.  சூரியனின் ஆதிக்கம் பெற்ற அந்த ஆதிசிவனே மனிதனாக நிச்சயம் இந்த பூவுலகில் அவதரித்து நம்மையெல்லாம் வழிநடத்த வேண்டும்.  மீண்டும் இந்த பூவுலகில் ராமராஜ்யம் விரைவில் அமைய வேண்டும் என்று நாம் அனைவரும் தினமும்  இறைவனை பிரார்திப்போம்.

அடுத்த பதிவில் சந்திப்போம்

சு. மணிகண்டன்.

31 December 2010

கருவறை முதல் கல்லறை வரையில்.......

இந்த உலகில் வாழ்வதற்கு அனைவருக்கும் இன்றிமையாதது பணம்.  ஏனெனில் பணத்தின் வாயிலாகவே நமது தேவைகள் பூர்த்தியாகின்றன. மனிதன் ஆசைப்பட்டதெல்லாம் பணத்தின் மூலமாகவே நிறைவேற்ற முடியும். பணம் இல்லையேல் இன்றைய வாழ்க்கை சூழலில் மனிதன் பிணத்திற்கு சமமானவனாக மதிக்கப்படுகிறான்.

தெய்வப் புலவர் வள்ளுவப் பெருந்தகை அவர்கள்

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை,
பொருள்இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு

என இரண்டே வரிகளில் பொருளின் அவசியத்தை எழுதிவைத்துள்ளர்.

ஆதிகாலத்தில் பண்டமாற்று முறை வளர்ச்சியடைந்து தற்போது பணம் என்றாகி பின்பு கிரெடிட் கார்ட் என்ற அளவில் உலகம் முழுவதும் வியாபித்துள்ளது.  உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நாம் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் வாங்கவும் விற்கவும் இணையவழி பண பரிவர்த்தனை முறைகள் உதவுகின்றன.

பணமானது உண்மையிலேயே நமக்கும் நமது சந்ததிகளுக்கும் பயன்பட வேண்டுமாயின் அது நமது உழைப்பின் வாயிலாக மட்டுமே ஈட்டப்பட வேண்டும்.  உழைப்பானது உடல் உழைப்பாகவும், அறிவின் ஆற்றலாகவும் வெளிப்பட்டு நமக்கு தக்க ஊதியத்தை பெற்றுத்தரும்.  இது எல்லா தொழில்களுக்கும் பொதுவானது.

வள்ளுவன் அறம் பொருள் இன்பம் வீடுபேறு என்று முதலில் அறத்தையே வைத்தார்.  மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஆறறிவு உடையவர்கள்  விலங்குகளை விட அறிவில் மேம்பட்ட நிலை பெற்றவர்கள் நன்மை தீமை உணர்ந்தவர்கள் எனவே அவர்கள் முதலில் அறம் என்னும் நியாய வழியிலேயே வாழ வேண்டும்.  மனிதர்க்கு முதன்மையானது அறமே பின்புதான் அவன் அவ்வழியில் நின்று பொருளீட்ட வேண்டும் அப்படி ஈட்டிய பொருளை அவன் நல்ல வழியில் அனுபவிக்க வேண்டுமாயின் அது அறவழியில் ஈட்டப்பட்டதாக இருக்க வேண்டும்.  அப்பொழுதுதான் அவன் பணத்தின் மூலம் இன்பத்தை முழுமையாக அடைய முடியும் என்பதை வள்ளுவன் கூற்று நமக்கு தெளிவுபடுத்துகிறது.

இதெல்லாம் ஆரம்ப பள்ளிபாடத்தில் நாம் படித்தது ஆனால் நடைமுறை வாழ்வில் வள்ளுன் கூறிய வழியில் எத்தனை பேர் வாழ்கின்றனர் என்றால் உலகில் அத்தகைய மனிதர்களை நாம் தேட வேண்டியுள்ளது.  ஆம் அரிதிலும் அரிதாகவே மனிதரில் நல்லவர்கள் உள்ளார்கள்.  நாட்டில் அதர்மம் தலைதூக்குவது மனிதகுலத்திற்கு அழிவையே ஏற்படுத்தும்.

படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான் ஐயோ என்று போவான் என்றான் பாரதி.

ஆம் அறிவில் மேம்பட்ட படித்த மேதைகளாக அதிகாரத்தில் இருக்கும் பல மனிதர்கள் தாம் இலஞ்சம் , ஊழல் போன்ற கீழ்த்தரமான வியாதிகளால் பீடிக்கப்பட்டுள்ளனர்.  இன்று இந்தியா முழுவதுமே பரவியுள்ள இத்தகைய நச்சுக்காற்றால் ஏற்படும் அழிவுகளையும் துன்பங்களையும் இந்த ஈனப்பிறவிகள் அறிவார்களா. அறிந்தும் தமக்கு என்று வந்தபின்பு அய்யோ! நான் என்ன பாவம் செய்தேனோ என்று மட்டும் அலறுகின்றனர். 

சாதாரண அலுவலக உதவியாளர்கள் முதல் ஆட்சியாளர்கள் வரை நிர்வாகத்தில் புறையோடிய புண்ணாக இந்த வியாதி பரவிக்கிடக்கிறது.  புண்ணில் சொரிந்து சொரிந்து சுகம் காணும் சொறிநாய்களாக இந்த மனிதர்கள் வாழ்கிறார்கள்.  மிகவும் மட்டரகமான இந்த திருட்டு பட்டப் பகலில் அடுத்தவன் பாக்கெட்டில் கைவைக்காத குறையாக அடித்து பிடித்து பிடுங்கும் பல ஜென்மங்கள் இன்றும் பல இடங்களில் உள்ளன. 

இத்தகைய (பண) எலும்பு வெறிபிடித்த நாய்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை சாதராண கூலித்தொழிலாளியிடம் கூட கையேந்தும் இந்த ஜென்மங்கள் லஞ்சம் வாங்க செய்யும் பம்மாத்து வேலைகளை எழுத ஏடுகள் கொள்ளாது.  பணத்துக்காக தம் கடமையை செய்யாதவர்கள் அதே பணத்திற்காக எதையும் செய்ய துணிவார்கள் பெற்ற தாயையும், மகளையும் கூட .................. துணிந்தவர்கள் ஏழையின் வயிற்றெறிசலும், கண்ணீரும் வேதனையும் இவர்களை ஒருநாளும் சும்மா விடவே விடாது. இல்லாதவனையும் இயலாதவனையும் பிடுங்கித் தின்னும் பிணந்திண்ணிக் கழுகுகள் இவைகள்.

உழைத்தவன் உணவிற்காக ஏங்கி கிடக்க  அவன் கழிவுகளை பொறுக்கி தின்னும் ஜென்மங்கள் தான் இவைகள்.  ஏழை ஒரு தீப்பெட்டிக்கு கூட வரி செலுத்தி தான் இந்த நாட்டில் வாழ்கிறான்.  அவன் உரிமைகளை, உடமைகளை ஒட்டுண்ணி போல் உறிஞ்சி வாழும் இந்த ஜென்மங்கள் எப்படி வாழ்வில் நற்கதி அடைய இயலும்.  இறைவன் தன் நியாய தீர்ப்பை நிச்சயம் அந்த பாவ ஆன்மாக்களுக்கு அளித்தே தீருவான்.

அரசு பள்ளியில் கைநிறைய ஊதியம் வாங்கும்  ஆசிரியர்கள் நடத்தும் பாடம் வகுப்பில் புரியாது.  ஆனால் அவர்களிடம் டியூஷன் சென்று பாருங்கள் அவர்களது பாடம் நடத்தும் திறமையை.  பிளந்து கட்டிவிடுவார்கள்.

மருத்துவமனையில் ஒரு மணிநேரம் கூட மருத்துவம் பார்க்காத மருத்துவர்கள் இரவு 12 மணிவரை கூட கிளினிக்கில் உட்கார்ந்துகொண்டு கிழி கிழி என கிழித்து விடுவர்கள்.

அரசு  பேருந்துகளில் சில்லரை கொடுப்பதற்கு ஆயிரம் முறை யோசித்து பயணி ஏமாந்து விடமாட்டானா என்று ஏங்கும் நடத்துனர்கள் எத்தனை எத்தனை இந்த நாட்டில்.  100 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினால் சில்லறை கொடுக்க எத்தனை ஏச்சு, பேச்சு, முனகல், திட்டு என்று வரும்.  ஆனால் கடையில் கலெக்ஷன் ஆன சில்லறையை கொடுத்து கமிஷன் மட்டும் தவறாமல் வாங்கிவிடுவார்கள்.

ஆண்களிடம் வீரம் பேசும் வீராதி வீரர்கள் பெண்களை கண்டால் குழையும் வீட்டு நாய்கள் எல்லா அலுவலகங்களிலும் ஏராளம் உண்டு.

இன்னும் எத்தனையோ அலுவலகங்களில் பகல் கொள்ளையடிக்கிறார்கள்  என்னத்தை சொல்ல.

இருப்பவர்கள் கொடுக்கிறார்கள்.  உனக்கென்ன அவர்கள் எல்லாம் நேர்மையாகவா சம்பாதிக்கிறார்கள் கொஞ்சம் எனக்கு கொடுத்தால்தான் என்ன குறைந்தா போய்விடுவார்கள் என்ற நினைப்பால் இல்லாதவனையும் இயலாதவனையும் அல்லவா அலைகழிக்கிறார்கள்.

 ஆனால் இதுகளுக்கு எல்லாம் பதவி வேண்டுமாம், பதவி உயர்வு வேண்டுமாம், ஊதியத்தை உயர்த்த வேண்டுமாம் இல்லாவிட்டால் வேலை நிறுத்தம் செய்வார்கள் புறகணிப்பார்கள் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க செய்வார்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பார்கள்.

ஏழைக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் தன் கடமையை செய்யமாட்டார்கள். தவறி செய்ய நேர்ந்தாலும் காலம் கடத்துவதும்.  இயன்ற வரையில் அவர்களிடம் ஏதாவது அடித்து பிடித்து பிடுங்கி தின்பதும் ச்சே இதெல்லாம ஒரு பிழைப்பா.

கடமையை செய் பலனை எதிர்பாராதே என்கிறது பகவத்கீதை

ஆனால் இங்கு செய்யும் கடமைக்கும், செய்யாத கடமைக்கும் கூட அரசு படியளக்கிறது.  ஆனாலும் அதுவும் போதாமல் தலைசொறியும் கூட்டத்தை என்னவென்று சொல்வது.  எங்கே எடுத்து செல்லப்போகிறார்கள் இந்த செல்வத்தை (பாவத்தை) தம்மை அறியாமலேயே தம் சந்ததிக்கும் அல்லவா சேர்த்து பாவத்தை மூட்டை கட்டுகிறார்கள்.  நுனிமரத்தில் இருந்து கொண்டு அடிக்கிளையை அல்லவா வெட்டுகிறார்கள் இந்த மூடர்கள் இவர்கள் படித்து என்ன பயன்.  குப்பையில் போடட்டும் அவர்களது படிப்புகளையும் பட்டங்களையும்.

ஈதல் இசைபட வாழ்தல் என்றானே வள்ளுவன்

ஈதல் என்பது பொருளை மட்டுமல்ல தமது உடல் பொருள் ஆவி என்று அனைத்தையும் ஏழை மக்களுக்காகவே ஈந்து விட்டு சென்றனரே சான்றோர்.  அவர்கள் வாழ்ந்த நாட்டிலா இவ்வளவு கேவலமான நிலை.  இந்தியா ஊழலில் உலகில் 3-ம்மிடமாம் அய்யகோ இந்த நாட்டில் தானா புத்தனும், காந்தியும், காமராஜரும் இன்னும் பல யோகிகளும் பிறந்தனர் என்ற ஐயம் எழுகிறதே.  அவர்களது தியாக வாழ்கையை வீணக்கிவிட்டார்களே இந்த பாவிகள்.
    
நெஞ்சு பொறுப்பதில்லையே
இந்த நிலைகண்ட மாந்தரை நினைத்து விட்டால்

என்ற பாரதியின் வரிகளை நினைத்து குமுறுகிறது நெஞ்சம்.